பாஜ நிர்வாகி வெட்டிக்கொலை: முன்விரோதம் காரணமா?

சிவகங்கை: சிவகங்கை அருகே வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (49). பாஜ கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளர். அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு செல்வக்குமார், டூவீலரில் சிவகங்கை – இளையான்குடி சாலையில் சாத்தரசன்கோட்டை அருகே சென்றபோது டூவீலரில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் அவரை வெட்டிவிட்டு தப்பி சென்றனர். அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்து செல்வக்குமார் இறந்துவிட்டதாக கூறினர். தகவலறிந்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் மற்றும் சிவகங்கை தாலுகா போலீசார் கொலையாளிகளை உடனடியாக கைது செய்வதாக உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்த செல்வக்குமார் உறவினர்கள் மற்றும் பாஜவை சேர்ந்தவர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அம்பேத்கர் சிலை முன் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.

The post பாஜ நிர்வாகி வெட்டிக்கொலை: முன்விரோதம் காரணமா? appeared first on Dinakaran.

Related Stories: