விடுமுறை தினமான நேற்று 45 ஆயிரம் பேர் திரண்டனர்; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான நேற்று 45 ஆயிரம் பக்தர்கள், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ேமலும், பவுர்ணமி நாட்களில் மட்டுமே கிரிவலம் சென்ற நிலைமாறி, வாரத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வார இறுதி விடுமுறை தினமான சனி, ஞாயிறு முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர், அதிகாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதிகாலையில் இருந்தே பொது தரிசன வரிசை மற்றும் ₹50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியது. சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக தரிசன வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ராஜ கோபுரத்தையும் கடந்து, வெளி பிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. நேற்று ஒரே நாளில் சுமார் 45 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர், தரிசனம் செய்த பக்தர்களுக்கு, நேற்று லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

குபேர லிங்க சன்னதியை அடுத்து அமைந்திருப்பது இடுக்கு பிள்ளையார் கோயிலாகும். இந்த சன்னதியின் நுழைவாயில் மிகவும் இடுக்கமானது என்பதால் இடுக்கு பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். இங்கு நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர். எனவே, நீண்ட வரிசையில் காத்திருந்து, வாயிலில் நுழைந்து வெளியேறி தரிசனம் செய்தனர்.

The post விடுமுறை தினமான நேற்று 45 ஆயிரம் பேர் திரண்டனர்; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: