நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் தெரிவித்துள்ளார். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு பல்வேறு முற்போக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதை மக்கள் அறிவர். நாள்தோறும் திட்டங்கள், மக்கள் மனந்தோறும் மகிழ்ச்சி என்பதே திராவிட மாடல் அரசின் எண்ணம். திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு இடையூறை ஏற்படுத்தி வருகிறது.

ஓர் அரசு என்பது வாக்களிக்க மறந்தவர்களுக்காகவும் செயல்படும் அரசாக இருக்கவேண்டும். வாக்களிக்காகத மக்களுக்காகவும் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்காகவும் மோடி அரசுக்கு முந்தைய அரசுகள் செயல்பட்டன. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, அரசியல் நோக்கத்தோடு அரசாங்கத்தை நடத்துகிறது.

அரசியல் நோக்கத்தோடு மோடி அரசு செயல்படுகிறது என்பதற்கான அடையாளம்தான் நிதிநிலை அறிக்கை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை புறக்கணித்த மாநில மக்களுக்கு எதிராக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜகவுக்கு இந்திய மக்கள் பெரும்பான்மை அளிக்கவில்லை. ஒரு சில மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லை என்றால் பாஜகவினால் ஆட்சி அமைத்திருக்க முடியாது.

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த இந்தியாவுக்கான நிதிநிலை அறிக்கையாக இருந்திருக்கவேண்டும். இந்தியா கூட்டணியை பழிவாங்கும் வகையில் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தங்களின் சறுக்கலுக்கு என்ன காரணம் என உணர்ந்து பாஜக திருந்தியிருக்கும் என்று நினைத்தேன், ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

மோடி தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஒரே திட்டம் எய்ம்ஸ் மருத்துவமனை. இது தமிழ்நாட்டை பழிவாங்கும் பட்ஜெட் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட். மோடி அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிலை குறித்து மக்கள் அறிவார்கள். சுயநலத்துக்காக நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள போட்டுக் கொண்ட பட்ஜெட் இது. ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டு மக்களின் குரலாக, ஏன் இந்திய நாட்டு மக்களின் குரலாக ஒன்று சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

The post நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: