காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

காஞ்சிபுரம், ஜூலை 27: காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் வாக்கெடுப்புக்கு நடத்ததுவதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ள நிலையில் மேயராக திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். அவருக்கு எதிராக எதிர் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு புகார்களை கூறி வந்தனர். இந்நிலையில், மேயர் தனது பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி 33 கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனிடம் மனு அளித்தனர். மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டம் வரும் 29ம் தேதி நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்தார்.

இதனை எதிர்த்து அதிமுக கவுன்சிலர் சிந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், மாநகராட்சி கூட்டத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க மேயருக்கு உத்தரவிட வேண்டும்.
கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த மாநகராட்சி ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம், காஞ்சிபுரத்தில் சாலை, குடிநீர் மற்றும் சாக்கடை பிரச்னைகளை சரி செய்யக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் மேயருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். ஆனால், மாநகராட்சி ஆணையர் மேயருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மேயருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொத்தாம் பொதுவாக உள்ளது. பணம் வசூலித்ததாக புகார் இல்லை. எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்காக ஜூலை 29ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்து வழக்கை முடித்துவைத்தார்.

The post காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: