மின்கம்பி அறுந்து விழுந்து 2 மாடுகள் பலி

செங்கல்பட்டு, செப். 1: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்கப்பெருமாள் கோயில் ஊராட்சியில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு 200க்கும் மேற்பட்ட மக்கள் விவசாயம் செய்து மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களின் கால்நடைகள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள ஏரியல் மேய்ச்சலுக்காக விடப்படுவது வழக்கம். அந்தவகையில் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த சடகோபன் மற்றும் சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான பசுமாடுகள் நேற்று ஏரியில் மேய்ந்துகொண்டு இருந்தன.

அப்போது, ஏரியில் இருந்த மின் கம்பத்தின் மின்கம்பி அறுந்து மாடுகள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசிப்பட்ட 2 மாடுகள் ஏரியில் பரிதாபமாக உயிரிழந்தன. இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து மாட்டை காப்பாற்ற முற்பட்டனர். ஆனால், மின்சாரம் பாய்ந்தநிலையில் பொதுமக்கள் யாரும் ஏரியில் இறங்காமல் மின் வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வந்த மின்வாரிய பணியாளர்கள், மின் இணைப்பை துண்டித்தனர். அத்துடன் அறுந்து விழுந்த மின்கம்பியை அகற்றிவிட்டு புதிய கம்பியை கம்பத்தில் இணைத்தனர்.

The post மின்கம்பி அறுந்து விழுந்து 2 மாடுகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: