கூடலூர் நகராட்சி பகுதியில் சேதம் அடைந்த நடைபாதை

 

கூடலூர், ஜூலை 26: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு கேகே நகர் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் நடைபாதை சேதம் அடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு கேகே நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வதற்கு ஊட்டி கூடலூர் சாலையில் இருந்து குடியிருப்புகள் வழியாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாயுடன் இணைத்து அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை பல இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகிறது.  குடியிருப்புகளில் இருந்து பிரதான சாலைக்கு வருவதற்கும், மருத்துவமனை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதற்கு நடைபாதையை இப்பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் இந்த நடைபாதையில் நடந்து செல்வோர் வழுக்கி விழுந்து விடும் ஆபத்து உள்ளது. ஏராளமான பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் இந்த நடைபாதையை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கூடலூர் நகராட்சி பகுதியில் சேதம் அடைந்த நடைபாதை appeared first on Dinakaran.

Related Stories: