மாமல்லபுரம், ஜூலை 26: மாமல்லபுரம் அருகே ஆளவந்தார் கோயிலில் நடைபெற்ற 110வது குருபூஜை விழாவில் சனாதனம் குறித்தும், ஆளவந்தார் நினைவிடத்தை அயோத்தி கோயிலாக மாற்ற வேண்டும் என பேசிய எச்.ராஜாவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் இசிஆர் சாலையொட்டி ஆளவந்தாருக்கு நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் குருபூஜை விழா நடப்பது வழக்கம். அதேபோல், அவரது நினைவிடத்தில் நேற்று 110வது குருபூஜை விழா நடந்தது. விழாவுக்கு, ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதையடுத்து, ஆளவந்தார் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. முன்னதாக, மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் மற்றும் திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயில் சார்பாக கும்ப மரியாதை செய்யப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
குருபூஜை விழாவில், பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, தேசிய வன்னியர் குல சத்ரிய மகா சங்கம் அமைப்பு சார்பில் குருபூஜை விழாவில் பங்கேற்க வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சமூக விரோதிகள் கார் கண்ணாடியை உடைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, பாமகவினர் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் ஆளவந்தார் குருபூஜை விழாவிற்கு எங்களை ஏன் முறைப்படி அழைக்கவில்லை என வாக்குவாதம் செய்ததால், அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
தொடர்ந்து, பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா பேசுகையில், சனாதனம் ஒரு கொசு மாதிரி, அதனை கொசு மருந்து அடித்து விரட்டி விடுவோம் என ஒருவர் பேசி வருகிறார். நாங்கள், கிறிஸ்தவர்களை கொசு மருந்து அடித்து கொன்று விடுவோம் என சொல்ல முடியுமா? சனாதன மாநாட்டுக்கு பீட்டர் அல்போன்ஸ் போகிறார். ஆளவந்தார், பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து மீட்டு பாதுகாக்க கம்பி வேலி அமைக்க வேண்டும்.
இந்த, ஆளவந்தார் நினைவிடத்தை அயோத்தி மாதிரி மாற்ற வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதால், பக்தர்கள் உள்ளிட்ட பலரும் கொந்தளித்தனர். பின்னர், மைக்கை மற்றொருவரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்டார். அதேபோல், மடங்களும், கோயில் சொத்துக்களும், சாமி சிலைகளும் கொள்ளையடிக்கப்படுகிறது என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் பேசியதாலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post மாமல்லபுரம் ஆளவந்தார் கோயில் 110வது குருபூஜை விழா சனாதனம், ஆளவந்தார் நினைவிடம் குறித்து எச்.ராசா சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.