செங்கல்பட்டு, டிச.9: மாற்றுதிறன் மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை 1-5ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.2000, 6-8ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.6000, 9-12ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.8000, பட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.12,000, தொழிற்கல்வி மற்றும் முதுகலைப் பட்டம் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.14,000 வருடாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், வாசிப்பாளர் உதவித்தொகை 9-12ம் வகுப்பு பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.3000, இளங்கலைப் பட்டம் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.5000, தொழிற்கல்வி மற்றும் முதுகலைப் பட்டம் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.6000 வாசிப்பாளருக்கு வழங்கப்படும். இவ்வுதவித்தொகை பெற அரசு இ-சேவை மையங்களில் மாற்றுத்திறன் தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள (UDID CARD) மருத்துவச் சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம், கல்வி பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடமிருந்து பெறப்படும் 2025-2026-ம் நிதியாண்டிற்கான கல்விச்சான்று (BONAFIDE CERTIFICATE) போன்றவற்றை பதிவேற்றம் செய்து உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
