செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையினர் கடனுதவி திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு, ஜூலை 25: செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையினர் கடனுதவி திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் 1ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்புறத்தில் ₹1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு மிகாமலும், கிராமப்புறத்தில் 98 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 2ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ₹2 லட்சமும், திட்டம் 2ன் கீழ் ஆண்களுக்கு, பெண்களுக்கு 65 வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ₹3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதமும், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தின் அதிகபட்ச கடனாக ₹10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவி குழுக்கடன் நபர் ஒருவருக்கு ₹1 லட்சம், ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2ன் கீழ் ஆண்களுக்கு 10 சதவீதம், பெண்களுக்கு 8 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ₹1.50 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. மேலும், சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1ன் கீழ் ₹20 லட்சம் வரையிலும் 3 சதவீதம் வட்டி விகிதத்திலும், திட்டம் 2ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ₹30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று. கடன்பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை ஒட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்க இருந்தால் மட்டும் ) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ். உண்மை சான்றிதழ் (Bonafied Certificate) கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையினர் கடனுதவி திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: