ஆந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தக்கோரி டெல்லியில் வரும் 24ம் தேதி தர்ணா போராட்டம்: முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

திருமலை: ஆந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தக்கோரி வரும் 24ம் தேதி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டாவில் நேற்று முன்தினம் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இளைஞரணி தலைவர் ரஷீத்தின் குடும்பத்தினரை நேற்று நேரில் சென்று பார்வையிட்டு முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜெகன்மோகன், தெலுங்கு தேசம் ஆட்சியில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்று தர வேண்டிய போலீசார் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர்.

ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 45 நாள் ஆட்சியில் 36 படுகொலைகள், 300க்கும் மேற்பட்ட படுகொலை முயற்சிகள், 560 இடங்களில் தனியாரின் சொத்துக்கள் சேதம் உள்ளிட்டவை நடந்துள்ளன. 490 அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது வீடு புகுந்து தாக்குதல்கள் நடந்துள்ளன. எனவே ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக்கோரி வரும் 24ம் தேதி டெல்லியில் ஒய்.எஸ்.ஆர். கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள், எம்.எல்.சிக்களுடன் தர்ணா போராட்டம் நடத்தப்படும். ஆந்திர மாநிலத்தின் நிலைமை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து புகார் அளிக்கப்படும்” என்று கூறினார்.

 

The post ஆந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தக்கோரி டெல்லியில் வரும் 24ம் தேதி தர்ணா போராட்டம்: முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: