அண்ணாமலையார் கோயிலில் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் தரிசனம் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு

திருவண்ணாமலை, ஜூலை 18: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆடி மாத பிறப்பு முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடந்தது. ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ராஜகோபுரத்தையும் கடந்து வெளி பிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. எனவே, சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், கிரிவலப்பாதையில் ஈசான்யம் பகுதியில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயிலில் நேற்று ஆடி முதல் நாள் முன்னிட்டு பச்சையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர். நாளை ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, பச்சையம்மன் வீதியுலா நடைபெற உள்ளது. அப்போது, நாக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்க உள்ளார். தொடர்ந்து ஆடி மாதம் முடியும் வரை ஒவ்வொரு வாரமும் அம்மன் வீதியுலா நடைபெறும்.

The post அண்ணாமலையார் கோயிலில் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் தரிசனம் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு appeared first on Dinakaran.

Related Stories: