கூட்டுறவு செயலர் உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு

 

தர்மபுரி, ஜூலை 17: தர்மபுரி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் புகுந்து சங்க செயலாளர் உட்பட 3 பேரை மர்ம நபர் அரிவாளால் வெட்டியது குறித்து மதிகோண்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தர்மபுரி மாவட்டம், மதிகோண்பாளையம் அருகே ஒட்டஅள்ளி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த முகமதுயாசின் (58) கடந்த ஒன்றரை ஆண்டாக செயலாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் இந்த கூட்டுறவு சங்கத்தின் இடம் எனக்கு சொந்தமானது எனக்கூறி வளாகத்தில் நின்று தகராறில் ஈடுபட்டுள்ளார். செயலாளர் முகமதுயாசின் அந்த நபருடன் பேசி சமாதானப்படுத்தினார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முகமதுயாசினை அவர் வெட்டியுள்ளார். இதில் அவருக்கு கையில் வெட்டு விழுந்தது.

இதனை தடுக்க வந்த பழனி என்பவருக்கு தலையிலும், கார்த்திக் என்பவருக்கு தோள்பட்டையிலும் வெட்டு விழுந்தது. இவர்களது சத்தம் கேட்டு பொதுமக்கள் வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார். அரிவாளால் வெட்டப்பட்டதில் காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மதிகோண்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கூட்டுறவு செயலர் உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Related Stories: