குழந்தைகளுக்கு பெற்றோர் பிறப்பு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், ஆக.27: திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது’
பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி, குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ்பெற பிறப்பு பதிவுச்சட்டம் வழிவகை செய்துள்ளது. குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பதிவு சான்றிதழாகும்.

குழந்தைகள் பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டைபெற, ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட் மற்றும் விசா உரிமம் பெற, அயல்நாட்டில் குடியுரிமை பெறுவதற்கு என அனைத்திற்கும் பிறப்பு சான்றிதழ் இன்றியமையாத ஆவணம். ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழி, சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமும் இன்றி பெயர் பதிவு செய்திடலாம். 12 மாதங்களுக்கு பின் 15 வருடங்களுக்கு ரூ.200 தாமத கட்டணம் செலுத்தி பெயரை பதிவு செய்திடலாம்.

இந்திய பிறப்பு, இறப்பு பதிவாளர் அறிவுரைப்படி 01.01.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கும், பிறப்பு பதிவு செய்யப்பட்டு 01.01.2000 தேதியிலிருந்து 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளிலும் பெயரை சேர்த்திட குழந்தையின் பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, திருவாரூர் மாவட்டத்தில் குழந்தையின் பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள பெற்றோர்கள் தொடர்புடைய நகராட்சி, பேரூராட்சி மற்றும் தாசில்தார்களுக்கு உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று, ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்கலாம். இவ்வாறான கால அவகாசம் நீட்டிப்பு 31.12.2024-க்கு பிறகு மீண்டும் வழங்க இயலாது என இந்திய தலைமை பிறப்பு, இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு குழந்தை பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.

The post குழந்தைகளுக்கு பெற்றோர் பிறப்பு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: