விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா எம்எல்ஏவாக பதவியேற்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி மரணமடைந்ததை அடுத்து இத் தொகுதிக்கு கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இத் தொகுதியில் அதிகபட்சமாக 82.48 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. பதிவான வாக்குகள் 13ம் தேதி எண்ணப்பட்டதில், பாமக வேட்பாளர் அன்புமணியை விட சுமார் 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்றார்.

இந்நிலையில் அன்னியூர் சிவா, நேற்று (செவ்வாய்) காலை 10.30 மணி அளவில் சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எல்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றவுடன் அன்னியூர் சிவா எம்எல்ஏவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா எம்எல்ஏவாக பதவியேற்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: