கொரோனாவுக்கு பின்னர் அதிகரித்த கண் பாதிப்பு பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தில் ஆண்டுக்கு 42 லட்சம் மாணவர்கள் பயன்

* பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச கண்ணாடிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதன் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. அப்போது பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமே வகுப்புகளை நடத்தியது. வீடுகளில் தொடர்ச்சியாக சுமார் 5 முதல் 8 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர்.

இதனால் அவர்களின் கண்களில் கோளாறு ஏற்பட்டு பெற்றோர் அவர்களை மருத்துவர்களிடம் அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி, அவர்கள் செல்போன், லேப்டாப் மற்றும் டி.வி.க்கள் முன் அமர்ந்து பல மணி நேரம் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் குழந்தைகளுக்கு கண் எரிச்சலும், கண்களில் நீர்வடிவதும் அதிகரித்து இருப்பதாக பெற்றோர் கூறினர். 2022ம் ஆண்டு பள்ளிகள் திறப்பட்டு மாணவர்களை பள்ளிகளுக்கு சென்றனர். இருப்பினும் ஆன்லைன் வகுப்புகள் அதிக அளவில் சாதனங்கள் பயன்படுத்திய தாக்கம் இன்று வரை இருந்து வருகிறது.

பள்ளிகளில் கிட்டப்பார்வை குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு அருகில் இருக்கும் பொருட்கள், எழுத்துக்களும், தூரப்பார்வை காரணமாக கரும்பலகையில் இருக்கும் எழுத்துகளை சரியாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன், லேப்டாப் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் பயன்படுத்திய 50.8 சதவீதம் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய சுகாதார நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. பணம் வசதி படைத்த பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளை தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.

ஆனால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்’ தற்போது அந்த மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பார்வைக் குறைவுக்கு தொடக்கத்திலேயே கண்ணாடி போடாவிட்டால் நாளடைவில் கண் பாதிப்பு அதிகரிக்கும். அதற்கு பின் கண்ணாடி போட்டாலும் பார்வை முழுமையாக கிடைக்காது. பார்வை பாதித்துவிட்டால் படிக்க முடியாமல் மாணவர்களின் கல்வித்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டு விடும்.

எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என்ற எண்ணத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் இந்த திட்டத்தை தொடங்கினார். இந்த திட்டம் மூலம் 6 முதல் 12 வகுப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்யப்பட்டு தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு 42 லட்சம் மாணவர்கள் இந்த திட்டம் மூலம் பயன்பெறுகின்றனர்.

இந்த திட்டத்தின் முதல்கட்டமாக பயிற்சி அளிக்க ஆசிரியர்கள், மாணவர்களை தூரத்தில் உள்ள எழுத்துகள் தெரிகிறதா, வண்ணங்கள் சரியாக தெரிகிறதா, கண்ணின் மையத்தின் கரும்புள்ளிகள் இருக்கிறதா, கண்ணாடி அணிந்திருக்கிறாயா, இல்லையா உள்ளிட்ட கேள்விகளுடன் பரிசோதிப்பார்கள். அதில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாராமெடிக்கல் உதவி கண் மருத்துவர் (PMOA) மூலம் முழுமையான கண் பரிசோதனை மேற்கொண்டு, அந்த மாணவனுக்கு ஏற்ற கண்ணாடியை மருத்துவர்கள் வழங்குவார்கள்.

2021ம் ஆண்டுக்கு பிறகு ‘பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்’ மூலம் பயன்பெறும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ‘பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்’ மூலம் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பயனடைகின்றனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு 42 லட்சம் மாணவர்கள் பரிசோதிக்கப்படுகின்றனர். அதில் பாதிப்பு உள்ள மாணவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் அவர்களுக்கு ஏற்ற கண்ணாடி வழங்கப்படுகிறது. வெளியில் ஒரு கண்ணாடி ரூ.2000 மேல் விற்கப்படுகிறது.

ஆனால் மாணவர்களுக்கு இந்த திட்டம் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. சுகாதாரத்துறை சார்பில் கண்ணாடிக்கு டெண்டர் விடப்பட்டு ஒரு கண்ணாடி ரூ.236 வாங்கப்படுகிறது. ஆண்டுக்கு ஆண்டு இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 2021-22ம் ஆண்டு 1.61 லட்சம் மாணவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. அது அடுத்த ஆண்டே 2.14 லட்சம் மாணவர்களாக அதிகரித்தது. கொரோனா காலத்தில் அதிக நேரம் மொபைல் அல்லது லேப்டாப் பார்த்த காரணத்தினால் இந்த அதிகரிப்பு இருக்கலாம்.

அதுமட்டுமின்றி தற்போதைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மொபைல் பயன்படுத்துகின்றனர். அது கண்ணுக்கு நல்லதல்ல. மேலும் பார்வைக்குறைவு ஏற்படாமல் தடுக்கவும் ஏற்கனவே பார்வைக்குறைவு உள்ளவர்களுக்கு லென்சு பவர் அதிகரிக்காமல் இருப்பதற்கும் பிள்ளைகளை அடிக்கடி வீட்டுக்கு வெளியே வெயிலில் விளையாட பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும் கண்ணுக்கு ஏற்ற சத்தான உணவு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* கண் பார்வையை மேம்படுத்த உதவும் உணவுகள்
கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் முக்கியம். கேரட், கீரைகள், மாம்பழம், பப்பாளி போன்ற பழங்கள், காய்கறிகள், பால் மற்றும் க்ரீம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல பாதாம், வால்நட், ராஜ்மா, ஓட்ஸ் ஆகிய கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். மேலும் டூனா, கானாங்கெளுத்தி மீன், ஆளி விதைகள், சியா விதைகள், வால்நட் ஆகிய ஒமேகா 3 உள்ள உணவுப் பொருட்களும் கண் பார்வையை மேம்படுத்தும்.

The post கொரோனாவுக்கு பின்னர் அதிகரித்த கண் பாதிப்பு பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தில் ஆண்டுக்கு 42 லட்சம் மாணவர்கள் பயன் appeared first on Dinakaran.

Related Stories: