குன்றத்தூரில் பரபரப்பு வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

குன்றத்தூர்: குன்றத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். குன்றத்தூர் ஸ்ரீபகவதி நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு (36). இவருக்கு, சித்ரா (33) என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் வழக்கம்போல் பாபு வேலைக்கு சென்ற நிலையில், சித்ராவும் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர், சிறிது நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் ரகசிய அறையில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.25 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதனைகண்டு அதிர்ச்சியடைந்த சித்ரா, இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார், கொள்ளையர்களின் கைரேகை உள்ளிட்ட தடயங்களை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், வீட்டின் இரும்பு கதவை மட்டும் பூட்டிய நிலையில், மரக் கதவை பூட்டாமல் மறந்து சென்றது தெரியவந்தது. எனவே, சித்ரா வீட்டிலிருந்து செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் உள்ளே புகுந்து கொள்ளையடித்து சென்றார்களா அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது வந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றார்களா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் கதவை உடைத்து நகை, பணம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post குன்றத்தூரில் பரபரப்பு வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Related Stories: