சாம்பியன் டிராபி தொடர் இந்தியா-பாகிஸ்தான் மார்ச் 1ல் மோதல்: உத்தேச அட்டவணை வெளியானது

லாகூர்: ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் 8 ஆண்டுகளுக்கு பின்னர் அடுத்த ஆண்டில் பாகிஸ்தானில் நடத்தப்பட உள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் இதில் பங்கேற்கின்றன. இதற்காக உத்தேச அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் வழங்கி உள்ளது. அதன்படி பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை தொடர் நடத்தப்பட உள்ளது. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து, குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 15 போட்டி நடத்தப்படுகிறது. லாகூர் மைதானத்தில் 7, கராச்சியில் 3, ராவல்பிண்டியில் 5 போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய அணியின் போட்டிகள் அனைத்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக லாகூரிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி மார்ச் 1ம் தேதி நடத்தப்பட உள்ளது. ஆனால் இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்வது தொடர்பாக பிசிசிஐ இதுவரை எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இந்திய அரசின் அனுமதி அளித்தால் மட்டுமே இந்தியா, பாகிஸ்தான் செல்லும். இல்லையெனில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடத்தபடலாம். இதனிடையே ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரை நடத்த ஆஸி. கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

 

The post சாம்பியன் டிராபி தொடர் இந்தியா-பாகிஸ்தான் மார்ச் 1ல் மோதல்: உத்தேச அட்டவணை வெளியானது appeared first on Dinakaran.

Related Stories: