ஒன்றிய அரசின் 3 புதிய சட்டங்களை வாபஸ் பெறக்கோரி ஜெயங்கொண்டத்தில் வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம், ஜூலை 3: ஜெயங்கொண்டம் நீதிமன்ற வளாகம் முன்பு மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற கோரி நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய தண்டனைச் சட்டம் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்குப் பதிலாக புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வழக்கறிஞர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இச்சட்டம் கடந்த 1ம் தேதி முதல் நடைமுறை படுத்தப்பட்டதை கண்டித்தும் இச்சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் ஜெயங்கொண்டம் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்ற வளாகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் இச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதால் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படும் வகையில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை வழக்கறிஞர்கள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.

முன்னதாக வக்கீல் சங்க செயலாளர் பழனிமுத்து வரவேற்று பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி துணை தலைவர் உத்திராபதி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசின் 3 புதிய சட்டங்களை வாபஸ் பெறக்கோரி ஜெயங்கொண்டத்தில் வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: