வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

நெல்லை, ஜூலை 5: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறிபோலி விசா தயாரித்து வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த கேரளாவை சேர்ந்த முதியவரை போலீசார் கைதுசெய்தனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் மாயாண்டி (58). இவரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறிய கேரளா மாநிலம் சித்தாராவைச் சேர்ந்த ரெஜின் (55) என்பவர் போலி விசா தயாரித்து ரூ.10 லட்சத்தை பெற்று மோசடி செய்தார். பின்னர் இதையறிந்து அதிர்ச்சியடைந்த மாயாண்டி நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ரெஜின் மீது நடவடிக்கை கோரி வழக்குத் தொடுத்தார். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரிலும் நெல்லை எஸ்பி சிலம்பரசன் ஆலோசனையின் பேரிலும் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பொறுப்பு பொன் ரகு தலைமையின் கீழ் இன்ஸ்பெக்டர் முத்து, ஏட்டுக்கள் ஜான் போஸ்கோ, முத்துராமலிங்கம், ஆனந்தராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ரெஜின் வெவ்வேறு மாநிலங்களில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் அவர் சம்பவத்தன்று மும்பையில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், ரெஜினை கைதுசெய்து நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவின்பேரில் பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: