₹8.36 கோடியில் ரயில் நிலைய விரிவாக்க பணி

திருவாரூர், ஜூலை 5: திருவாரூரில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 36 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் ரயில் நிலைய விரிவாக்க பணிகளை தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேற்று ஆய்வு செய்தார்.

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்திற்குட்பட்ட திருவாரூர் ரயில் நிலையமானது கடந்த 1861ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டதாகும். தற்போது 161 ஆண்டுகளை கடந்துள்ள இந்த ரயில் நிலையமானது திருவாரூரிலிருந்து நாகை வழிதடத்தில் நாகூர் மற்றும் காரைக்கால் மார்கத்திலும், தஞ்சை வழிதடத்தில் நீடாமங்கலம் மற்றும் திருச்சி மார்கத்திலும், மயிலாடுதுறை வழிதடத்தில் சென்னை வரையிலும் மற்றும் திருத்துறைப்பூண்டி வழிதடத்தில் காரைக்குடி மார்கத்திலும் ரயில்கள் சென்று வரும் நிலையில் 4 முனை ரயில் நிலையமாக இருந்த வருகிறது.

இந்நிலையில் இந்த ரயில் நிலையத்தில் மாற்றுதிறனாளிகள் மற்றும் வயதானவர்கள் கோரிக்கையின் பெயரில் ஏற்கனவே ரயில் நிலைய விரிவாக்க நிதி திட்டத்தின் மூலம் 3 பிளாட் பாரங்களிலும் மின்தூக்கி எனப்படும் லிப்ட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது அமரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலைய விரிவாக்க பணிகள் ரூ 8 கோடியே 36 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் ரயில் நிலைய கட்டிடம் நவீன முறையில் விரிவாக்கம், பயணிகளை ஈர்க்கும் விதமாக ரயில் சந்திப்பின் முகப்பில் அலங்கார வளைவுகள் மற்றும் விசாலமான நுழைவாயில், புதிய இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், பாதசாரிகள் நடந்து செல்வதற்காக நடைபாதை, அனைத்து நடைமேடைகளிலும் கூடுதலான இருக்கைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய்கள், பாதுகாப்பான மேற்கூரைகள், மேம்படுத்தப்பட்ட கழிவறைகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக சாய்வு தள பாதை, பார்வையற்றோர் நடந்த செல்ல ஏதுவாக தொடுஉணர் தரைதளம் மற்றும் பயணிகள் காத்திருப்பு அறை, டிக்கெட் முன்பதிவு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த பணிகளை தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேற்று ஆய்வு செய்த நிலையில் பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்துமுடித்திட வேண்டும் என அலுவலர்கள் மற்றும் ஓப்பந்தகாரர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்ட நிலையில் முன்னதாக திருவாரூர் மாவட்ட ரயில் பயணிகள் நலசங்கம் சார்பில் செயலாளர் பாஸ்கரன் மற்றும் பொறுப்பாளர்கள் பொது மேலாளரை வரவேற்று ரயில்நிலை மேம்பாடு மற்றும் கூடுதல் ரயில் வசதி குறித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

The post ₹8.36 கோடியில் ரயில் நிலைய விரிவாக்க பணி appeared first on Dinakaran.

Related Stories: