பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்ய உத்தரவு

சென்னை: பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கி வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள்(School Management Committee)கடந்த 2022ம் ஆண்டு மறு கட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக .செயல்பட்டு வருகின்றன.

2022 ஜூலை தொடங்கி 2024 மே வரை 16 பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் வெள்ளிக் கிழமைகளில் நடத்தப்பட்டன. அதில் கற்றல், சேர்க்கை மேலாண்மை தொடர்பாக 3 லட்சத்து 71 ஆயிரத்து 729 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு அதில் 75 ஆயிரத்து 863 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசின் பிற துறைகளால் 8 ஆயிரத்து 311 தீர்மானங்களும் நிறைவேற்றித்தரப்பட்டுள்ளன.

ஏற்கெனவே நியமிக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுவின் பதவிக் காலம் ஜூலை மாதம் முடிவடைய உள்ள நிலையில், 2024-2026ம் ஆண்டுக்கான மேலாண்மைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.பள்ளி மேலாண்மை குழுவின் புதிய உறுப்பினர்களை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு செய்ய வேண்டும். குழுவுக்கு பெற்றோர் ஒருவர் தலைவராக இருக்க வேண்டும். தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட வேண்டும்.

பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கல்வியாளர், சுயஉதவிக் குழு உறுப்பினர், முன்னாள் மாணவர்கள் என மொத்தம் 24 பேர் குழுவில் இடம் பெற வேண்டும். அதில் 18 பேர் பெற்றோராகவும், மொத்த உறுப்பினர்களில் 12 பேர் பெண்களாகவும் இருக்க வேண்டும். மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியரே உறுப்பினர்களை தேர்வு செய்யும் அலுவலராக இருந்து தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் குமரகுரு அரசாணையில் தெரிவித்துள்ளார்.

The post பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: