குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மணலை அரசு வீடு கட்டும் திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

கொள்ளிடம், ஜூன் 29: கொள்ளிடம் அருகே அரசுக்கு சொந்தமான மணல் குடோனில் உள்ள மணலை அரசு வீடுகட்டும் திட்டத்தில் பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் மற்றும் பாலூரான்படுகை ஆகிய இடங்களில் கொள்ளிடம் ஆற்றில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அரசுக்கு சொந்தமான மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரிகளில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து அள்ளப்படும் மணல் லாரிகள் மூலம் குன்னம் கிராமத்தில் உள்ள மணல் குடோனில் சேமித்து வைத்து அங்கிருந்து மணல் லாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மணல் குவாரி கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இன்னும் கிராமத்தில் மணல் குடோனில் தேக்கி வைக்கப்பட்டிருந்த மணலும் அள்ள முடியாமல் அப்படியே இருந்து வருகிறது. இந்த மணலை எடுப்பதற்கு உரிய வழி வகை இல்லாமல் இருந்து வருவதால் மணல் குடோனிலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கலைஞர் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி வீடுகள் கட்டி தரும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு,கட்டும் பணி துவங்கிய நிலையில் உள்ளது. ஆனால் வீடு கட்டும் பயனாளிகளுக்கு போதிய மணல் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

குன்னம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான குடோனில் தேக்கி வைக்கப்பட்டுள்ள மணலை எடுத்தால் அரசின் கான்கிரீட் கட்டும் திட்டத்தின் கீழ் கட்டி வரும் பயனாளிகளுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். மணலை தேடி அலைய வேண்டிய சூழ்நிலை இருக்காது. எனவே குன்னம் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மணலை அரசு வீடு கட்டும் பயனாளிகளுக்கு மானிய விலையில் அரசு எடுத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீடு கட்டும் பயனாளிகள் சார்பில் கோரிக்கை விடக்கப்பட்டுள்ளது.

The post குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மணலை அரசு வீடு கட்டும் திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: