ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சென்னைக்கு பெருமளவு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இத்தகையச் சூழலில், கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் இருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து, சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், அந்த விமானத்தில் கென்யா நாட்டைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக சுற்றுலாப்பயணி விசாவில் சென்னைக்கு வந்தார். அவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, அந்தப் பெண் பயணியை நிறுத்தி விசாரித்துள்ளனர்.
அப்போது, அந்தப் பெண் முன்னுக்குப் பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து, அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சுங்கத்துறை பெண் அதிகாரிகள் முழுமையாக பரிசோதித்துள்ளனர். அப்போது, அந்தப் பெண் அணிந்திருந்த ஷூக்கள் சற்று வித்தியாசமாக இருந்ததைக் கண்டு ஷுக்களை கழட்டிப் பார்த்து சோதித்துள்ளனர்.
அந்த ஷுக்களின் அடி பாகங்களில் ரகசிய அறை வைத்து அதற்குள் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அதுமட்டுமின்றி, மேலும் 5 ஜோடி ஷுக்கள் அவருடைய பைக்குள் இருந்ததையும், அந்த ஷுக்களிலும் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததையும் கண்டறிந்துள்ளனர்.
இதனை அடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் ஷுக்களில் இருந்த போதைப்பொருட்கள் முழுவதையும் பறிமுதல் செய்து, அது எந்த வகையான போதைப்பொருள் என்பதை ஆய்வு செய்வதற்காக சோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து வந்த தகவலின் அடிப்படையில், அவை அனைத்தும் கொக்கைன் போதைப்பொருள் என்று தெரியவந்தது.
மேலும், கென்யா நாட்டு இளம் பெண்ணிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த போதைப்பொருட்கள் 2.2 கிலோ கொக்கைன் என்றும், அதன் சர்வதேச மதிப்பு சுமார் 22 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் கென்யா நாட்டு இளம் பெண்ணை நேற்று இரவு கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், இந்த இளம் பெண் சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகவே, இந்த பெண் சென்னையில் யாரிடம் இந்த போதைப் பொருளை கொடுப்பதற்காக எடுத்து வந்தார்? சென்னையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் யார் இருக்கின்றனர் என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சென்னையில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: இளம்பெண் கைது appeared first on Dinakaran.