அன்னியூர் சிவா, சி.அன்புமணி, அபிநயா வேட்பு மனுக்கள் ஏற்பு : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக – பாமக – நாதக இடையே மும்முனை போட்டி!!

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி மறைவையொட்டி அத்தொகுதியில் வருகிற ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி முடிவடைந்தது. விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சந்திரசேகர் வேட்பு மனுக்களை பெற்றார். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோரிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மேலும் இதர கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 64 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில் குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் ஆறுமுகம் என்பவர் கையில் தாலியுடன் வெள்ளை புடவை அணிந்து விதவை கோலத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்படி, வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. இதனிடையே வேட்பு மனுவை திரும்ப பெற 26ம் தேதி கடைசி நாள் ஆகும். விக்கிரவாண்டி தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்த நிலையில், வேட்பாளர்களின் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக திமுக, பாமக ஆகிய கட்சிகள் தங்கள் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். அதேபோல் சுயேட்சை வேட்பாளர்களும் ஆங்காங்கே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ம் தேதி எண்ணப்படுகிறது.

The post அன்னியூர் சிவா, சி.அன்புமணி, அபிநயா வேட்பு மனுக்கள் ஏற்பு : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக – பாமக – நாதக இடையே மும்முனை போட்டி!! appeared first on Dinakaran.

Related Stories: