சென்னையில் இரவில் கொட்டி தீர்த்த மழை

சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. அதேபோன்று சென்னையில் கடந்த 3 நாட்களாக பகல் நேரங்களில் வெயில் கடுமையாக இருந்தாலும், இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் சென்னையில் நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், தி.நகர், சூளைமேடு, கோயம்பேடு, வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், போரூர், குன்றத்தூர், கிண்டி, பூந்தமல்லி, பாரிமுனை, சென்ட்ரல், எழும்பூர், வேளச்சேரி, திருவான்மியூர், கொட்டிவாக்கம், புரசைவாக்கம் போன்ற பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல், சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதமான சூழ்நிலை நிலவியது.

The post சென்னையில் இரவில் கொட்டி தீர்த்த மழை appeared first on Dinakaran.

Related Stories: