சென்னை பெருநகர காவல் மோப்பநாய் பிரிவிற்கு புதிதாக வந்துள்ள “லேப்ரடார் ரெட்ரீவர்” வகையைச் சேர்ந்த “7 நாய்க்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்..!!

சென்னை: சென்னை பெருநகர காவல் மோப்பநாய் பிரிவிற்கு புதிதாக வந்துள்ள “லேப்ரடார் ரெட்ரீவர்” வகையைச் சேர்ந்த “7 நாய்க்குட்டிகளுக்கு காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பெயர் சூட்டினார். சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் நிகழ்ந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவ இடங்களில் சென்னை பெருநகர காவல் மோப்பநாய் பிரிவின் மோப்ப நாய்கள் மூலம் தங்களது திறமைகளால் அநேக வழக்குகளில் குற்றம் நிகழ்வுகள் மற்றும் குற்றவாளிகளை கைது செய்ய பெரிதும் உதவுகின்றன.

மேலும் வெடிகுண்டு கண்டறிதல், போதை பொருட்கள் கண்டறிதல் சம்பவங்களிலும் மோப்பநாய்கள் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்வதில் பெரிதும் உதவுகின்றன. இதற்காக சென்னை பெருநகர காவல் மோப்ப நாய் பிரிவில் உள்ள நாய்களுக்கு பிரத்தியேக பயிற்சிகள் மற்றும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெருநகர காவல் துறையின் மோப்ப நாய் பிரிவு கீழ்ப்பாக்கம் மற்றும் புனித தோமையர் மலை ஆகிய இரண்டு இடங்களில் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் இயங்கி வருகின்றன.

இங்குள்ள மொத்தம் 21 மோப்ப நாய்களுக்கு உயர்ரக பயிற்சிகள் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 14 நாய்கள் வெடிகுண்டுகளை கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்றவை. சாத்தியமான அச்சுறுத்தல்களை விரைவாகவும் துல்லியமாகவும் அடையாளம் காண்பதை உறுதி செய்கின்றன. கூடுதலாக 6 நாய்கள் குற்றங்களை கண்டறியவும் 1 நாய் போதைப் பொருள் கண்டறிதலுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப இன்று (12.06.2024) காலை வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் மோப்பநாய் பிரிவிற்கு புதிதாக வந்துள்ள “லேப்ரடார் ரெட்ரீவர்” வகையைச் சேர்ந்த மூன்று மாதங்களான ஏழு நாய்க்குட்டிகளுக்கு ஸ்னோபி, ஸ்கூபீ, மிக்கி, கூபி, பெட்டி, மினி, மற்றும் ஓடி (Snoppy, Scooby, Mickey, Goofy, Betty, Mini and Odie) என்று பெயரிட்டு சென்னை பெருநகர காவல் மோப்ப நாய் பிரிவிற்கு வழங்கினார். புதிய நாய்க்குட்டிகளுக்கு காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில் பிரத்தியேக பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை பெருநகர காவல் மோப்பநாய் பிரிவிற்கு புதிதாக வந்துள்ள “லேப்ரடார் ரெட்ரீவர்” வகையைச் சேர்ந்த “7 நாய்க்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்..!! appeared first on Dinakaran.

Related Stories: