குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி உள்பட 3 சிறுவர்கள் பலி டிஎஸ்பி விசாரணை செய்யாறு அருகே திருவிழா நாளில் சோகம்

செய்யாறு, ஜூன் 10: செய்யாறு அருகே திருவிழா நாளில் குளத்து நீரில் மூழ்கி அண்ணன், தம்பி உட்பட 3 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, நெடும்பிரை கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். மாடு தரகு வியாபாரி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன்கள் பரத்(9), சந்தோஷ்(7). இதில், பரத் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பும், சந்தோஷ் 2ம் வகுப்பும் படித்து வந்தனர். ராமதாஸின் அக்கா செய்யாறு வள்ளலார் தெருவை சேர்ந்த வாணி. இவரது கணவர் முரளிகிருஷ்ணன். இவர்களது மகன் சாய்சரண்(12), தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நெடும்பிரை கிராமத்தில் கோயில் திருவிழாவிற்காக முரளி கிருஷ்ணன் குடும்பத்தினர் வந்திருந்தனர். தொடர்ந்து, சிறுவர்கள் பரத், சந்தோஷ் மற்றும் சாய்சரண் ஆகிய 3 பேரும் நேற்று மாலை 3.30 மணியளவில் வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது, சிறுவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்க தொடங்கினர். அந்த கிராமத்தில் காட்டு அம்மன் தீமிதி விழா மாலை 6 மணி அளவில் நடைபெற இருந்த நிலையில், குளத்தின் அருகே உள்ள பச்சையம்மன் கோயிலில் கரகம் வர்ணிப்பதற்காக ஊர்மக்கள் திரண்டு இருந்தனர். அப்போது, குளத்தில் 3 சிறுவர்களும் தத்தளிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம இளைஞர்கள் விரைந்து சென்று, குளத்தில் இறங்கி மீட்க முயன்றனர். ஆனாலும், நீரில் மூழ்கியதில் பரத், சந்தோஷ், சாய்சரண் ஆகிய மூவரும் சடலமாகவே மீட்கப்பட்டனர்.

இதற்கிடையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மோரணம் போலீசார் 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தகவலறிந்ததும் செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தைகளை இழந்து தவித்த ராமதாஸ் மற்றும் முரளி கிருஷ்ணன் தம்பதிகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும், தகவலறிந்த டிஎஸ்பி சின்ராஜ் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 3 சிறுவர்கள் ஒரே நேரத்தில் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

The post குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி உள்பட 3 சிறுவர்கள் பலி டிஎஸ்பி விசாரணை செய்யாறு அருகே திருவிழா நாளில் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: