தெற்கு காசாவின் ரஃபா நகரம் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு: 35 பேர் உயிரிழப்பு

காசா: தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் அங்கிருந்த 1,200 பேரை சுட்டு கொன்றனர். 250 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஹமாஸ் படைகளும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலின் வர்த்தக மையமான டெல் அவிவ் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக நேற்று ஹமாஸ் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் இஸ்ரேல் விமானங்கள் போரினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த ரஃபாவில் உள்ள முகாம் மீது சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கியது.

இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், மற்றும் குழந்தைகள் ஆவர். படுகாயம் அடைந்த 20 பேருக்கு ரஃபாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் விமானங்கள் எந்நேரமும் தாக்குதல்களை தொடங்கலாம் என கூறப்படுவதால் ரஃபா முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ஹமாஸ் இயக்கத்தின் தலைவர்களின் மறைவிடம் மீது தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல் ராணுவம், இதில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக கூறியுள்ளது.

The post தெற்கு காசாவின் ரஃபா நகரம் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு: 35 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: