கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் நன்னாரி!

நன்றி குங்குமம் டாக்டர்

கோடையின் வெம்மையைத் தவிர்க்க நாம் பல்வேறு வழிமுறைகளைத் கையாள்கிறோம். குளிர்பானங்கள். பழச்சாறுகள் ஆகியவை கோடையின் உக்கிரத்தை தணிக்க உதவுகின்றன. வெம்மையால் ஏற்படும் உடல்சூடு, தலைவலி, வேர்க்குரு, வேனல்கட்டி, அதிக தாகம். நாவறட்சி போன்றவற்றைக் குணப்படுத்துவதில் நன்னாரி பெரும்பங்கு வகிக்கிறது. கடைகளில் பெரும்பாலும் நன்னாரி சர்பத் வடிவில் கிடைக்கிறது.

வகைகள்: நன்னாரி இரு வகைப்படும் என சித்த நூல்கள் குறிப்பிடுகின்றன. சீமை நன்னாரி, நாட்டு நன்னாரி என இருவகை காணப்படுகிறது. சீமை நன்னாரி சுருள், சுருளாக காணப்படும். நாட்டு நன்னாரிதான் எங்கும் அதிகமாகக் காணப்படுகிறது. மாகாளி கிழங்கு வேர் எனவும் அழைக்கப்படும். சீமை நன்னாரி பால்வினை நோய்களை தீர்க்கும் வல்லமை உடையதென சித்த நூல்கள் குறிப்பிடுகின்றன. நாட்டு நன்னாரி பானங்கள் தயாரிக்கவும். பல்வேறு நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகின்றன.

மருத்துவப் பயன்கள்

நன்னாரிவேரை உலரவைத்து பொடித்து, ஒரு கப் பாலில் ஒரு ஸ்பூன் பொடியை கலந்து குடித்துவர, சிறுநீர் மஞ்சளாக போவது மாறும்.வேர்ப்பட்டையை உரித்து நீர்விட்டு காய்ச்சி கசாயமாக்கி வடிகட்டி தேவையான அளவு பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட வயிற்றுப்போக்கு நிற்கும். இருமல் குணமாகும்.வேரைச்சுட்டு கரியாக்கி, பொடித்து ஒரு தேக்கரண்டி பொடியுடன், அதே அளவு சீரகம் கலந்து, சிறிது சர்க்கரை சேர்த்து நெய்யில் குழைத்து இருவேளை வீதம் 15 நாட்கள் சாப்பிட சிறுநீர் எரிச்சல், கடுப்பு, சூடு குணமாகும்.

வேரை அரைத்து வீக்கங்கள் மேல் போட வீக்கம் வடியும்.நன்னாரி சர்பத்தை குளிர்ந்த நீரில் கலந்து அருந்த வேர்க்குரு, வேனல் கடுப்பு வராது. வேரை அரைத்து பாலில் கலந்து குடிக்க கண் சிவப்புச்சூடு மாறும்.வேரை நீர்விட்டு காய்ச்சி அரை டம்ளர் நீரில், சிறிதளவு பெருங்காயம், நெய் கலந்து குடிக்க, வாந்தி உணர்வு மாறும்.வேரை தூளாக்கி சமஅளவு மல்லித்தூள் கலந்து, சிட்டிகை அளவு காலையில் உண்டுவர பித்தம், குடல்நோய் குணமாகும்.

நீரில் வேரை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு குறையும். சூடு தணியும்.வேர்ப்பொடியை தேனில் கலந்து அரிப்பு, தேமல் உள்ள இடங்களில் தேய்க்க இவை மாறும்.குடிநீரில் நன்னாரியைப் போட்டு குடிக்க சூட்டுத் தலைவலி, கண்சூடு மாறி உடல் குளிர்ச்சியாகும்.நன்னாரி வேர்ப்பொடியை, தேனில் குழைத்து காலையில் உண்ண அல்சர் மாறும்.
நன்னாரி வேர்ப்பொடியை பால், டீயில் கலந்து குடிக்க மணமாக, சுவையாக இருக்கும்.

தொகுப்பு: சா.அனந்தகுமார்

 

The post கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் நன்னாரி! appeared first on Dinakaran.

Related Stories: