புல்டோசரை வைத்து இடிப்பார்கள் என பிரதமர் கூறுவது சுத்த பொய்: காங். தலைவர் கார்கே காட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் என்று பிரதமர் கூறுவது சுத்த பொய் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அளித்த பேட்டி ஒன்றில், காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. ஆனால் யாரும் யாரையும் வழிப்படக்கூடாது என்று தடுத்தது இல்லை. அல்லது யாருடைய மாங்கல்யத்தையும் பறித்தது இல்லை. பிரதமர் கூறுவது சுத்த பொய். அவர்கள் இதுபோன்று தான் பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாரும் இதுபோன்று பேசியது இல்லை. அனைத்து பிரிவினரையும், சாதியினரையும் மதிக்கிறோம்.

ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் மதிக்கிறோம். இதற்கு முன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். ஆனால் பாஜவும், மோடி ஜீயும் தங்களது வாக்குகளுக்காக மக்களை பிரித்துவிட்டனர். அவர்கள் வாக்குகளுக்காக இதுபோன்று செய்துவிட்டு, மற்றவர்கள் புல்டோசரை பயன்படுத்துவார்கள் என்று குற்றம் கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் புல்டோசர் மூலமாக இடிக்கப்படும் என்று பிரதமர் கூறுவது பொய் பிரசாரமாகும். ஒவ்வொரு முறை காங்கிரஸ் ஏழை மக்களுக்கான திட்டங்களை அறிமுகப்படுத்தும்போதும் பாஜ அதனை கடுமையாக விமர்சித்தது. ஆனால் இப்போது ரேஷனை இரடிப்பாக்குவது குறித்து பேசுகிறார்கள்.எங்கெல்லாம் ஏழைகளுக்கு உதவி தேவையோ, பிற்படுத்தப்பட்டோருக்கு உதவி தேவையோ அவர்களுக்கான திட்டங்களை வகுப்போம் ”என்றார்.

* பாஜவை தோற்கடிக்கும் வியூகம்
காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில், பாஜவை தோற்கடிக்கும் வியூகத்தின் ஒரு பகுதியாக தான் இந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் குறைந்த இடங்களில் போட்டியிட்டுள்ளது. கூட்டணி கட்சியினரை ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனவே தான் இந்த விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொண்டோம் என்றார்.

The post புல்டோசரை வைத்து இடிப்பார்கள் என பிரதமர் கூறுவது சுத்த பொய்: காங். தலைவர் கார்கே காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: