அய்யலூரில் இடப்பிரச்னையில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

வேடசந்தூர், மே 19: திண்டுக்கல்லில் உள்ள காசுக்கடை தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் (70). இவருக்கு அய்யலூர் சந்தைப்பேட்டை பகுதியில் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் தங்களுக்கும் பங்கு உள்ளது என சந்தைப்பேட்டையை சேர்ந்த பழனிக்கண்ணு (50), வேல்முருகன் (37) ஆகியோர் வேடசந்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சந்திரசேகரன் அந்த இடத்தில் கம்பி வேலி போட்டு வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மே 13ம் தேதி பழனிக்கண்ணு, வேல்முருகன் ஆகியோர் சந்திரசேகரனின் இடத்தில் போடப்பட்ட வேலியை அறுத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. தகவலறிந்ததும் சந்திரசேகரன் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் இதுகுறித்து தட்டி கேட்டுள்ளார். அப்போது பழனிக்கண்ணு, வேல்முருகன் சேர்ந்து சந்திரசேகரனை தகாத வார்த்தைகளால் திட்டி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சந்திரசேகரன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ சித்திக் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post அய்யலூரில் இடப்பிரச்னையில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: