காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின்படி 2 மனைவி இருந்தா ரூ2 லட்சமா?.. சர்ச்சை பேச்சு குறித்து காங். வேட்பாளர் விளக்கம்


போபால்: இரண்டு மனைவிகள் இருந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும் என பேசியது குறித்து ரத்லாம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் காந்திலால் பூரியா விளக்கம் அளித்துள்ளார். மத்தியபிரதேசத்தின் ரத்லாம் மக்களவை தொகுதிக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.இங்கு ஒன்றிய முன்னாள் அமைச்சர் காந்திலால் பூரியா காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தேர்தல் கூட்டத்தில் காந்திலால் பூரியா கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய பூரியா, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகாலஷ்மி திட்டத்தின்கீழ் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்டுக்கு ரூ1 லட்சம் வழங்கப்படும். இதில் இரண்டு மனைவிகளை கொண்ட ஆண்களுக்கு ரூ.2 லட்சம் லாபம் கிடைக்கும்” என்று பேசியது சர்ச்சையை எழுப்பியது. இதுகுறித்து காந்திலால் பூரியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திடம் பாஜ புகார் அளித்துள்ளது.

இந்நிலையில் தன் பேச்சு குறித்து காந்திலால் பூரியா விளக்கம் அளித்துள்ளார். பூரியா தன் ட்விட்டர் பதிவில், “என் பேச்சு குறித்து ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானது. பழங்குடியின சமூகத்தில் இரண்டு மனைவிகளை திருமணம் செய்வது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.1 லட்சம் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பற்றி பேசினேன். அப்போது பழங்குடியின ஆண் ஒருவர் எனக்கு இரண்டு மனைவிகள் என்று சொன்னார். அவருக்கு பதில் தரும் விதமாக இரண்டு மனைவிகள் இருந்தால் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் தரப்படும் என்று கிண்டலாக பதில் சொன்னேன். இந்த விஷயத்தில் பாஜ என் மீது தவறான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

The post காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின்படி 2 மனைவி இருந்தா ரூ2 லட்சமா?.. சர்ச்சை பேச்சு குறித்து காங். வேட்பாளர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: