ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு: பயணிகள் அவதி

சென்னை: ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். பெங்களூரு – டெல்லி, கோழிக்கோடு – துபாய், குவைத் – தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஓரே நாளில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது. இந்த நடவடிக்கையின் போது ஏற்கனவே பணியில் இருந்த ஊழியர்களுக்கும் புதிய ஊழியர்களுக்கும் இடையே பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நேர்காணலில் நன்றாக செயல்பட்டபோதும் குறைவான நிலையில் ஊதியம் உள்ள பணியில் அமர்த்தப்படுவதாகவும், போனஸ் உள்ளிட்டவற்றில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் ஊழியர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஏர் இந்தியா ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் இன்று ஒரேநாளில் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளனர். இதனால் ஏர் இந்தியா விமான சேவை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 78 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உள்நாடு, வெளிநாட்டு விமான சேவை கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமான ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரேநாளில் 300க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா விமான ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: