அரியலூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி

*ஹோமத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது விபரீதம்

அரியலூர் : அரியலூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் வந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஹோமத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த விபரீத சம்பவம் நடந்தது.அரியலூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே ஜல்லி ஏற்றி வந்த லாரி ஒன்று நேற்று மாலை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக அரியலூரில் இருந்து சென்ற கார் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரின் முன் பகுதி பலத்த சேதமானது. காரில் இருந்த 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அவ்வழியே சென்றவர்கள் உடனடியாக திருமானூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அரியலூர் எஸ்பி செல்வராஜ் மற்றும் திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றார். விசாரணையில், விபத்தில் இறந்தது தஞ்சாவூர் மேலவீதியை சேர்ந்த குருமூர்த்தி மகன் ஈஸ்வரன் (24), பலராமன் மகன் புவனேஷ் கிருஷ்ணசாமி (18), தேவா மகன் செல்வா (17), கரந்தையை சேர்ந்த விசு மகன் சண்முகம் (23) ஆகியோர் என்பதும், இவர்கள் அரியலூரில் நடைபெற்ற ஒரு ஹோம நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது இந்த கோர விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. பின்னர் போலீசார் விபத்தில் பலியான 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரியலூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: