கார் மோதி கல்லூரி பேராசிரியர் பலி

திருப்போரூர்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (36). சென்னை சேலையூரில் உள்ள தனியார் பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மேல்மலையனூரில் இருந்து சேலையூருக்கு பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, திருப்போரூரை அடுத்துள்ள செம்பாக்கம் பகுதியில், எதிரே வந்த கார் பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஸ்ரீராம் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த திருப்போரூர் போலீசார், ஸ்ரீராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாடு திருடிய 3 பேர் கைது: திருப்போரூர் அடுத்த இள்ளலூர் பெரியார் நகரை சேர்ந்தவர் துளசி (50). இவரது, மாடு கடந்த 2 தினங்களுக்கு முன்பு காணாமல்போனது. இதை பல இடங்களில் தேடியபோது இள்ளலூர் வனப்பகுதியில் மாட்டை வெட்டி தலை மற்றும் உடல் பாகங்களை போட்டுவிட்டு இறைச்சியை எடுத்துச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து, துளசி திருப்போரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த குகநாதன் (38), தயா (20), தட்சிணாமூர்த்தி (43) ஆகிய 3 பேரும், மாட்டை திருடி கொன்று இறைச்சியை விற்றது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், தொடர்புடைய கார்த்திக் (32) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post கார் மோதி கல்லூரி பேராசிரியர் பலி appeared first on Dinakaran.

Related Stories: