வெளி மாநிலத்தவர் என பாஜ என் மீது குற்றம் சாட்டுகிறது நவீன் பட்நாயக்கின் இயற்கையான வாரிசு நான்: ஒடிசா முதல்வரின் மாஜி தனி செயலாளர் பாண்டியன் பேட்டி

புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் இயற்கையான வாரிசு நான் தான் என்றும் வெளி மாநிலத்தவர் என பாஜ தன் மீது குற்றம் சாட்டுவதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் தெரிவித்தார். ஒடிசாவில் பேரவை தேர்தலுடன் மக்களவை தேர்தல் 4 கட்டமாக நடக்கிறது. தொடர்ந்து 5 முறை சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள பிஜூ ஜனதா தளம் 6 வது முறையாக ஆட்சி அமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் நவீன் பட்நாயக்கின்(77) நம்பிக்கைக்கு உரியவரும்,முன்னாள் தனிச்செயலாளருமான வி.கே.பாண்டியன் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,‘‘நவீன் பட்நாயக்கை என்னுடைய குருவாக கருதுகிறேன்.நான் அவருடைய சிஷ்யர்.நான் நவீன் பட்நாயக்கின் தீவிர விசிறி . நவீன் பட்நாயக் ஒடிசா மக்களுக்காக ஏராளமான கனவுகளை வைத்துள்ளார்.மக்களுக்கு அவர் சிறந்த முறையில் பணியாற்றுவதற்காக இந்த பூமியில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை பூர்த்தி செய்ய அவருக்கு துணைபுரிவேன்’’ என்றார்.நீங்கள் நவீன் பட்நாயக்கின் இயற்கையான வாரிசா என்று கேட்ட போது,‘‘நவீன் பட்நாயக்கின் சிறந்த பண்புகளை கொண்டவர்கள் தான் அவருடைய இயற்கையான வாரிசாக முடியும்.

நவீன் பட்நாயக்கின் நேர்மை,மக்கள் பணி செய்வதற்கான உறுதி,கடின உழைப்பு,நேரம் தவறாமை உள்ளிட்ட பல்வேறு பண்புகள் என்னிடம் இருக்கிறது. அந்த வகையில் அவருடைய இயற்கையான வாரிசு நான்தான்’’ என்றார். வெளிமாநிலத்தவர் என உங்களை பாஜ குற்றம் சாட்டுகிறதே என கேட்டபோது,‘‘ அரசியல் காரணங்களுக்காக பாஜ கட்சியினர் தான் என்னை இவ்வாறு தாக்குகின்றனர்.ஒடிசா மக்கள் என்னை அவ்வாறு கருதவில்லை. மாநிலத்தில் 25 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். அங்கு உள்ள மக்கள் அவர்களில் ஒருவராக என்னை கருதுகின்றனர். இதனால் நான் கலந்து கொள்ளும் பேரணிகளில் என்னுடைய பேச்சை கேட்க ஏராளமானோர் திரண்டு வருகின்றனர்’’ என்றார்.

The post வெளி மாநிலத்தவர் என பாஜ என் மீது குற்றம் சாட்டுகிறது நவீன் பட்நாயக்கின் இயற்கையான வாரிசு நான்: ஒடிசா முதல்வரின் மாஜி தனி செயலாளர் பாண்டியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: