பெறும் வாக்குகளுக்கு இணையாக மரம் நடுவேன்: நடிகரின் வித்தியாச வாக்குறுதி

கட்டால்: “தேர்தலில் பெறும் வாக்குகளுக்கு இணையாக மரங்களை நடுவேன்” என மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரும், நடிகருமான தேவ் வித்தியாசமான வாக்குறுதி அளித்துள்ளார். மேற்குவங்கத்தின் கட்டல் மக்களவை தொகுதிக்கு 25ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக பெங்காலி சூப்பர் ஸ்டார் தீபக் அதிகாரி என்ற தேவ் 3ம் முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக மற்றொரு நடிகரான ஹிரன் சட்டர்ஜியை பாஜ நிறுத்தி உள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன் சிபிஐ வேட்பாளர் தபன் கங்குலி போட்டியிடுகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் தேவ் நேற்று கட்டல் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமில் ரத்த தனம் அளித்தார். தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவ், “ரத்த வங்கிகள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. ரத்த தானம் செய்வது மிகப் பெரிய பணி. அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும். நாம் தரும் ரத்தம் யாரோ ஒருவருக்கு புதிய வாழ்க்கையை கொடுக்கும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய தேவ், “கடந்த சில ஆண்டுகளாக ஏப்ரல் மாதத்தில் இவ்வளவு வெய்யில் இல்லை. இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவு வெப்பம் உள்ளது. வெப்பத்தில் இருந்து நம்மை காக்க மரங்களை நடும் முயற்சியை எடுத்துள்ளேன். நான் தேர்தலில் 9 லட்சம் வாக்குகள் பெற்றால் 9 லட்சம் மரங்களை நடுவேன்” என வித்தியாசமாக வாக்குறுதி அளித்தார்.

The post பெறும் வாக்குகளுக்கு இணையாக மரம் நடுவேன்: நடிகரின் வித்தியாச வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: