கட்டுமான தொழிலாளர்கள் சங்க மே தின கூட்டம்; உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் நடந்த கட்டுமான தொழிலாளர்கள் சங்க மே தின கூட்டத்தில், ‘உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுராந்தகத்தில், தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்கத்தின் 35வது ஆண்டு மே தின கவன ஈர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.  மதுராந்தகம் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட பேரணி, தேசிய நெடுஞ்சாலை, ஹாஸ்பிடல் சாலை திருமண மண்டபத்தை அடைந்தது. கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் குமார் தலைமை தாங்கினார்.  மாநில துணை தலைவர் கண்ணன், துணை பொதுச்செயலாளர் பழனி, மாநில செயற்குழு உறுப்பினர் அர்ஜுனன், சங்க ஆலோசகர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தமிழ்வாணன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணகுமார், வழக்கறிஞர் தேசிங் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தங்க பெருதமிழமுதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், சங்க உறுப்பினர்களுக்கு மகப்பேறு காலத்தில் ரூ30 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். இயற்கை மரணத்திற்கு ரூ5 லட்சம் வழங்க வேண்டும், பணியின்போது உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post கட்டுமான தொழிலாளர்கள் சங்க மே தின கூட்டம்; உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: