திருட முயன்றபோது பயங்கரம்; மின்கசிவால் ஏடிஎம்.மில் இருந்த 8.12 லட்சம் ரூபாய் கருகியது

திருமலை: கொள்ளையர்கள் ஏடிஎம் மையத்தில் புகுந்து இயந்திரத்தை உடைத்து திருட முயன்றனர். ஆனால் பணத்தை எடுக்க முடியாமல் அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் இயந்திரம் தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.8.12 லட்சம் கருகி நாசமானது. தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் குடிபண்ட கிராமத்தில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏ.டி.எம். உள்ளது. பிரதான சாலையில் உள்ள இந்த ஏடிஎம்.மை வாடிக்கையாளர்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த ஏடிஎம் இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது அவ்வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் ஏடிஎம் இயந்திரம் கருகிவிட்டது. மேலும் சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 8.12 லட்சம் பணம் தீயில் கருகி நாசமானது தெரிய வந்தது. மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்தில் நுழைந்து இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் பணத்தை எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆனால் அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தபோது மின்கசிவால் இந்த தீ விபத்து நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஏடிஎம்.மில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post திருட முயன்றபோது பயங்கரம்; மின்கசிவால் ஏடிஎம்.மில் இருந்த 8.12 லட்சம் ரூபாய் கருகியது appeared first on Dinakaran.

Related Stories: