பழைய அரசாணைப்படி ரேக்ளா ரேஸ்: ஐகோர்ட் அனுமதி

மதுரை: பழைய அரசாணைப்படி ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கண்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘விலங்குகள் நலன் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து தமிழ்நாட்டில் பாரம்பரிய கலாசார கட்டமைப்பின் ஒரு அங்கமாக ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக டிஜிபி சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பல நிபந்தனைகளுடன் ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் இதில் சில நிபந்தனைகள் நடைமுறையில் கடைபிடிக்க முடியாதவை.

தன்னிச்சையாக எடுக்கப்பட்டது போல தெரிகிறது. எனவே அந்த சுற்றறிக்கை நிபந்தனைகளை ரத்து செய்து, பழைய அரசாணைப்படி ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர், மனுவிற்கு உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யுமாறும், அதுவரை தற்போது கோயில் திருவிழாக்கள் காலம் என்பதால் ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி கோருபவர்களுக்கு ஏற்கனவே உள்ள பழைய அரசாணை அடிப்படையில் நடத்தி கொள்ள அனுமதி வழங்க வேண்டும்,’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாத்திற்கு தள்ளிவைத்தனர்.

The post பழைய அரசாணைப்படி ரேக்ளா ரேஸ்: ஐகோர்ட் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: