வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். வத்தலக்குண்டு பேரூராட்சிக்குட்பட்ட பெரியகுளம் சாலையில் பயணியர் விடுதியில் இருந்து ஆஞ்சநேயர் கோயில் வரை சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் மின் விளக்குகள் வசதி இல்லை. இந்த சாலை வழியாகத்தான் பழைய வத்தலக்குண்டு, கட்டகாமன்பட்டி, விராலிபட்டி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்கின்றனர்.

மேலும் கோட்டைப்பட்டி சென்றாய பெருமாள் கோயில், பழைய வத்தலக்குண்டு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயில், ஆஞ்சநேயர் கோயில் உள்பட பல்வேறு கோயில்களுக்கு செல்லும் பக்தர்களும் இச்சாலையை வழியே தான் பயணிக்கின்றனர். இப்பகுதியில் மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரம் சாலை முழுவதும் கும்மிருட்டாக காணப்படுகிறது.

இதனால் பொதுமக்கள், பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் வாகனங்களில் செல்லும் போது நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் இந்த சாலையில் மின் விளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி appeared first on Dinakaran.

Related Stories: