அஷுதோசின் அதிரடி ஆட்டம் வீண் பஞ்சாப்பை போராடி வென்றது மும்பை

மொகாலி: ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 9 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் போராடி வென்றது. மொகாலியில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரண் பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 53 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 78 ரன்னும், ரோகித் சர்மா 25 பந்தில் 36 ரன்னும் எடுத்து சாம் கரண் பந்தில் ஆட்டமிழந்தனர்.

திலக் வர்மா 18 பந்தில் 34 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் பந்துவீச்சாளர்களில் ஹர்ஷல் படேல் 3, கரண் 2, ரபாடா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்ததாக 20 ஓவரில் 193 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் (0), லிவிங்ஸ்டோன் (1) கொயட்சி பந்திலும், சாம் கரண் (6), ரஸ்ஸோவ் (1) பும்ரா வேகத்திலும் வெளியேற 14 ரன்னில் 4 விக்கெட் விழுந்தது. அடுத்ததாக ஹர்பிரீத் சிங் 13, ஜிதேஷ் சர்மா 9 ரன்னில் வெளியேற பஞ்சாப் தடுமாறியது.

இந்தநிலையில், ஷஷாங்க் சிங் 25 பந்தில் 41 ரன் (3 சிக்சர், 2 பவுண்டரி) விளாசி நம்பிக்கை தந்தார். அடுத்ததாக சிக்சர் மழை பொழிந்த அஷுதோஷ் சர்மா 23 பந்தில் அரைசதம் விளாசி ஆட்டத்தை பஞ்சாப் பக்கம் திருப்பினார். ஆனால் அஷுதோஷ் 61 ரன்னில் (28 பந்து, 7 சிக்சர், 2 பவுண்டரி) கொயட்சி பந்தில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 19.1 ஓவரில் 183 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 9 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

The post அஷுதோசின் அதிரடி ஆட்டம் வீண் பஞ்சாப்பை போராடி வென்றது மும்பை appeared first on Dinakaran.

Related Stories: