அது வேற வாய்.. இது வேற வாய்.. மோடி அலை இருந்தது.. இருக்கு.. இருக்கும்.. நடிகை நவ்னீத் ரானா அந்தர் பல்டி

அமராவதி: “நாட்டில் மோடி அலை இருந்தது, இருக்கிறது, இருக்கும் என அமராவதி தொகுதி வேட்பாளர் நடிகை நவ்னீத் ரானா அந்தர் பல்டி அடித்துள்ளார். மகாராஷ்டிராவில் அமராவதி(தனி) தொகுதி பாஜ வேட்பாளராக நடிகை நவ்னீத் ரானா மீண்டும் போட்டியிடுகிறார்.

2014 மக்களவை தேர்தலில் அப்போதைய தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த நவ்னீத், 2019 தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று அமராவதி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்மைக்காலமாக பாஜவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வந்த நவ்னீத் ரானா, ஏப்ரல் முதல் வாரத்தில் பாஜவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து வரும் தேர்தலில் அமராவதி தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடுகிறார்.

கடந்த திங்கள்கிழமை(ஏப்.15) அமராவதி தொகுதியில் பிரசாரம் செய்த நடிகை நவ்னீத் ரானா, “இந்த தேர்தலை கிராம பஞ்சாயத்து தேர்தலாக நினைத்து நன்றாக உழைத்தால்தான் வெற்றி கிடைக்கும். நாட்டில் மோடி அலை என ஒன்று இல்லை. அவர் மீண்டும் வெற்றி பெறுவார் என்ற மாயையில் இருக்க கூடாது. கடந்த தேர்தலில் மோடி அலை வீசும்போதும் அமராவதியில் நான் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றேன்” என்று பேசியிருந்தார்.

அவரது பேச்சு குறித்து தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் கட்சி, உத்தவ் சிவசேனா கட்சி “ரானா உண்மையை பேசுகிறார்” என்று தெரிவித்திருந்தன. ஆனால் அவரது பேச்சுக்கு பாஜவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து நவ்னீத் கூறியதாவது, “திங்கள்கிழமை பேரணியில் நான் பேசியதை திரித்து வௌியிட அரசியல் எதிரிகளால் சதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் மோடி அலை இருந்தது, இருக்கிறது, இருக்கும். நாட்டின் முன்னேற்றத்துக்கு மோடி தேவை” என்று கூறியுள்ளார்.

The post அது வேற வாய்.. இது வேற வாய்.. மோடி அலை இருந்தது.. இருக்கு.. இருக்கும்.. நடிகை நவ்னீத் ரானா அந்தர் பல்டி appeared first on Dinakaran.

Related Stories: