‘நாமே பாடுபட்டால் தான் வெற்றிக்கு வாய்ப்பு’; அடித்து சொல்கிறார் பாஜ வேட்பாளரான அம்பாசமுத்திரம் அம்பானி பட நாயகி நவ்நீத் கவுர்

மும்பை: மோடி அலை இல்லை என அமராவதி தொகுதி பாஜ வேட்பாளரான நவ்நீத் கவுர் ரானா பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கிய நவ்நீத் கவுர் ரானா, தமிழில் ‘அம்பா சமுத்திரம் அம்பானி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2014ம் ஆண்டில் அரசியலில் கால் பதித்த இவர், முதல்முறையாக மக்களவை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார்.

அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார். பின்னர், 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட நவ்நீத் ரானா, சிவசேனா வேட்பாளர் ஆனந்தராவ் அத்சுலை வீழ்த்தி எம்பி ஆனார். ஆனால், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் போது அவர் போலியான சாதி சான்றிதழை சமர்ப்பித்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், சாதிச் சான்றிதழை ரத்து செய்தது. பின்னர் மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நவ்னீத்தின் சாதிச்சான்றிதழ் செல்லும ்என தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து சில நாட்களில் நவ்நீத் ரானா பாஜவில் சேர்ந்தார். அவர் எம்பியாக உள்ள அமராவதி தொகுதியிலேயே அவருக்கு பாஜ சீட்டு வழங்கியது. நவ்நீத் ரானா பிரசாரத்தில் பேசுகையில், ‘இந்த தேர்தலில் மோடி அலை இல்லவே இல்லை. மோடி தான் மீண்டும் வெற்றி பெறுவார் என்ற மாய பிம்பத்தில் இருக்கக் கூடாது. கடந்த தேர்தலில் மோடி அலை இருந்த போதிலும், நான் அமராவதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். ’ என்று தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டு அக்கட்சி சார்பில் போட்டியிடும் நவ்நீத் ரானாவே, மோடி அலை இல்லை என்று கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

The post ‘நாமே பாடுபட்டால் தான் வெற்றிக்கு வாய்ப்பு’; அடித்து சொல்கிறார் பாஜ வேட்பாளரான அம்பாசமுத்திரம் அம்பானி பட நாயகி நவ்நீத் கவுர் appeared first on Dinakaran.

Related Stories: