புழல் பகுதியில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர்: போக்குவரத்து நெரிசல்

 

புழல்: சென்னை புழலில் உள்ள குடிநீர் வாரிய வளாகத்தில் இருந்து புழல்-அம்பத்தூர் சாலை, சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, செங்குன்றம்-செம்பியம் மாநில நெடுஞ்சாலை வழியாக சென்னை கொளத்தூர் பகுதிக்கு பூமிக்கு அடியில் பைப் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், புழல் அடுத்த செங்குன்றம்-செம்பியம் மாநில நெடுஞ்சாலை விநாயகபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள குடிநீர் பைப்லைனில் நேற்று மாலை திடீரென்று உடைப்பு ஏற்பட்டது.

இதனால், குடிநீரானது பைப்லைனில் இருந்து வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் சேறும், சகதியுமாக மாறியது.  இதனால் அவ்வழியே சென்ற வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. இருசக்கர வாகனங்களில் சென்ற சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், பாதசாரிகள் சேற்றில் நடந்து செல்ல முடியாமல் பரிதவித்தனர். எனவே, உடைந்த பைப்லைனை உடனடியாக சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post புழல் பகுதியில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர்: போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: