ஆயக்காரன்புலம் கலிதீர்த்தஐயனார் கோயில் சித்திரை திருவிழா; தங்க குதிரையில் சுவாமி வீதியுலா

வேதாரண்யம், ஏப்.16: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தில் கலிதீர்த்தஐயனார் ஆலய சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தங்க குதிரை எடுக்கும் திருவிழா நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடைபெற்று சித்திரை திருவிழா துவங்கபட்டது ஆயக்காரன்புலம் செல்லியம்மன் ஆலயத்திலிருந்து தங்க குதிரை வாகனம் புறப்பட்டு வந்தது. வழிநெடுகிலும் கோயிலின் அருள்வாக்கு சித்தர் கலிதீர்த்தான் பக்தர்கள் மீதுபூதூவி அருளாசி வழங்கினார்.

வழி நெடுகிலும் தப்பாட்டம், கொம்பு, ரதக் காவடி, கேரள செண்டை மேளம் கரகம், முளைப்பாரி, பால்குடம், பெண்களின் கோலாட்டம் குறவன் குறத்தி நடனம், நாதஸ்வர இன்னிசை கச்சேரி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமிய கலை நிகழ்சிகளோடு முக்கிய வீதிகள் வழியே சுமார் 3 கி.மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தது. வழிநெடுகிலும் ஏரளமான பக்தர்கள் குதிரைக்கு மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று கலிதீர்த்த ஐயனாருக்கு நூறு குடம் பால் அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கண்கவர் வணவேடிக்கையும், ராம நாடகமும் நடைபெற்றது. நிகழ்வில் சுற்றுப்புற பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற தங்க குதிரை ஊர்வலத்தில் பக்தர்களுக்கு அங்கங்கே நீர்மோர், உள்ளிட்ட குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கபட்டது.

The post ஆயக்காரன்புலம் கலிதீர்த்தஐயனார் கோயில் சித்திரை திருவிழா; தங்க குதிரையில் சுவாமி வீதியுலா appeared first on Dinakaran.

Related Stories: