கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்

நியூயார்க்: ஆபாச பட நடிகைக்கு ரூ.1 கோடி பணம் வழங்கிய குற்றச்சாட்டு குறித்த விசாரணை மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் தொடங்கியது. இதையொட்டி நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார். இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் மீண்டும் களமிறங்கியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல் என்பவர் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

இது பிரசாரத்தின் போது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தனது வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு ரூ.1 கோடி பணம் வழங்கி அந்த விஷயத்தை மூடி மறைக்க முயற்சி செய்தார். நடிகைக்கு பணம் வழங்கியதை தேர்தல் செலவு கணக்கில் டிரம்ப் சேர்த்துள்ளார். இதனால் போலியாக செலவை காட்டியதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து, மன்ஹாட்டன் நீதிமன்றம் டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்தது.

அமெரிக்க வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். மன்ஹாட்டன் நீதிமன்ற நீதிபதிகள் பெரும்பாலும் ஜனநாயக கட்சிக்கு ஆதரவானவர்கள். எனவே வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று டிரம்பின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான வழக்கு இன்னும் சில வாரங்களில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கு விசாரணையில் டிரம்ப் நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணைக்காக தொடர்ந்து நீதிமன்றத்துக்கு வரவேண்டி உள்ளதால் வாரத்தில் 2 அல்லது 3 நாள்கள் மட்டுமே தேர்தல் பிரசாரத்தில் அவர் கலந்து கொள்ள முடியும்.

The post கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: