போதையில் நண்பர்களுடன் எஸ்ஐயை தாக்கிய விஏஓ

பரமத்திவேலூர், ஏப்.15: பரமத்திவேலூர் அருகே குடிபோதையில் போலீஸ் எஸ்ஐயை தாக்கிய, விஏஓ உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் குமார். இவர் நேற்று மாலை, சுண்டபணை பிரிவு அருகே, டூவீலர் வாகன விபத்தில் சேதம் அடைந்த 2 வாகனங்களை எடுத்து வர மினி ஆட்டோவுடன் சென்றுள்ளார்.

திரும்பி வரும் போது, சுண்டப்பனை பிரிவு சாலை பகுதியில், வாகனங்கள் செல்ல முடியாத அளவில் சாலையின் குறுக்கே அமர்ந்து 5பேர் மது அருந்தி உள்ளனர். மினி ஆட்டோ அந்த பகுதியை கடக்க முடியாததால், அங்கிருந்தவர்களிடம் ஆட்டோ டிரைவர் பரத்குமார் ஆட்டோ செல்ல வழி விடுமாறு கூறியுள்ளார். அங்கிருந்த நபர்கள் குடிபோதையில் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.

ஆட்டோவுக்கு பின்னால் டூவீலரில் வந்த எஸ்ஐ குமார், இதை தட்டிக் கேட்ட போது, அவர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் எஸ்ஐ குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் முகத்தில் காயம் அடைந்த அவர், பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் ரங்கசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர், அங்கு குடிபோதையில் இருந்த 5 பேரையும், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், பொத்தனூரை சேர்ந்த விஏஓ சிவபிரகாசம் (41), பரமத்திவேலூரை சேர்ந்த லெனின்(27), அதே பகுதியை சேர்ந்த முகிலன்(26), பொத்தனூரை சேர்ந்த திலீபன்(32), பூபதி (30) என்பதும் தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த, பரமத்திவேலூர் போலீஸ் டிஎஸ்பி சங்கீதா, அவர்களிடம் விசாரணை நடத்தினார். 5 பேரின் தாக்குதலால் காயமடைந்த எஸ்ஐ குமார், பரமத்திவேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம், பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post போதையில் நண்பர்களுடன் எஸ்ஐயை தாக்கிய விஏஓ appeared first on Dinakaran.

Related Stories: