மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி

ஊட்டி : ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்ற சார்பில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவின்படி சமரச வார விழா துவங்கப்பட்டு நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டியில் உள்ள பழைய மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச விழிப்புணர்வு பேரணி துவங்கியது. பேரணி கலெக்டர் அலுவலகம், ஸ்டேட் பேங்க் சாலை,டிபிஓ., சந்திப்பு வழியாக மீண்டும் பழைய நீதிமன்றத்தை வந்தடைந்தது. முன்னதாக, இந்த பேரணியை மாவட்ட நீதிபதி அப்துல்காதர் துவக்கி வைத்து கலந்து கொண்டார். இதில், நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பேரணியின் போது, பொதுமக்கள் மற்றும் வழக்கு தரப்பினர்கள் ஆகியோர்களுக்கு சமரசம் என்றால் என்ன, சமரசத்தின் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், சமரசர் முன்னிலையில் அந்தந்த வழக்குதாரர்கள் பேச்சுவார்த்தையில் சமரசம் செய்து கொள்வது, நிலுவையில் உள்ள வழக்குகளை நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர்கள் மூலமாகவோ சமரச மையத்திற்கு அனுப்பி வைத்து தீர்வு காண்பது, மேல்முறையீடு கிடையாது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இது தெடார்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமரச மைய ஒருங்கிணைப்பாளர் லிங்கம்,வக்கீல்கள் ரேவதி,மாலினி, சகிலா,கவிதா,கீதா மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். குன்னூர்: சமரச விழிப்புணர்வு தினத்தையொட்டி குன்னூர் சார்பு நீதிமன்றம் முதல் குன்னூர் பஸ் நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இப்பேரணியை குன்னூர் சார்பு நீதிபதி சந்திரசேகரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கோத்தகிரி குற்றவியல் நீதிபதி வனிதா மற்றும் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாபு மற்றும் செயலாளர் பிஜு சக்காரியா அனைத்து வழக்கறிஞர்களும் மற்றும் அனைத்து நீதிமன்ற ஊழியர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். சமரச விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சமரச மையம் குறித்த விழிப்புணர்வு மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சுமூக தீர்வு காண சமரச மையங்கள் உள்ளது என்பதை பொதுமக்களுக்கு தொியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பேரணி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கும், பேருந்து நிலையத்தில் இருந்தவர்களுக்கும் நீதிபதிகள் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: