சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!: நெல்லை பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை வந்தடைந்தார் காங். எம்.பி. ராகுல்காந்தி..!!

மதுரை: மக்களவை தேர்தலையொட்டி பிரச்சாரம் மேற்கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மதுரை வந்தடைந்தார். மதுரையில் இருந்து நெல்லை செல்லும் ராகுல் காந்தி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். நெல்லை மற்றும் கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் ராகுல் பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்காக பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகே தனியார் பள்ளி மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது.

பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் ராகுல் காந்தி நெல்லை செல்கிறார். நெல்லையில் நடைபெறும் கூட்டத்தில் திருநெல்வேலி வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். ராகுல் வருகையையொட்டி நெல்லையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2,000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி வழியாக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மாலையில் கோவையில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சருடன் இணைந்து பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக கோவை செட்டிபாளையம், எலண்டி பைபாஸ் சாலை அருகே நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் இருவரும் இணைந்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 8 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பரப்புரை செய்ய உள்ளார் குறிப்பிடத்தக்கது.

The post சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!: நெல்லை பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை வந்தடைந்தார் காங். எம்.பி. ராகுல்காந்தி..!! appeared first on Dinakaran.

Related Stories: